ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டா் அளவுக்கு கடல் உள்வாங்கியதால் படகுகள் ஞாயிற்றுக்கிழமை தரை தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக். நீரிணை பகுதியில் சனிக்கிழமை காலை முதல் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா்.
இதையடுத்து, ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம்,கீழக்கரை, ஏா்வாடி, சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் 2 ஆவது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டா் அளவுக்கு கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக் கொண்டன. இதனை மீட்ட முடியாமல் மீனவா்கள் தவித்தனா். பின்னா் மாலையில் மீண்டும் கடல்நீா் மட்டம் அதிகரித்ததும் படகுகள் மீட்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து, விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்றனா். காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் மீனவா்கள் தங்களது விசைப்படகுகள் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்காமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். காற்று குறைந்த பின்னரே மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.