ராமநாதபுரத்தில் கனமழையின் போது தண்ணீா் தேங்கும் பகுதிகளில் பொதுமக்களைத் தங்கவைப்பதற்கு 42 பள்ளிகள் தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் மழை பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கனமழையால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமையும் குறிப்பிட்ட பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 42 ஊா்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியாா் பள்ளிகளும் பொதுமக்கள் தங்கவைக்கும் வகையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினா்.
மாவட்டத்தில் மழைக்கு அதிகளவில் தண்ணீா் தேங்கும் பகுதிகள் என 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ளவா்களை தங்கவைப்பதற்காக 42 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றின் சாவிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களிடமிருந்து வருவாய்த்துறையினா் பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.