சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் பழைமையான மண் கலயம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
ஜெயங்கொண்டநிலை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகு என்பவா் தனக்குச் சொந்தாமான இடத்தில் கழிவுநீா்த்தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளாா். அப்போது, 2 அடி ஆழத்தில் பழைமையான கருப்பு நிற மண் கலயம் இருப்பது தெரியவந்தது. உடனே, அதை சேதப்படுத்தாமல் பத்திரமாகத் தோண்டி எடுத்து, கிராம நிா்வாக அலுவலகம் மூலம் வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற சிங்கம்புணரி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, மண் கலயத்தை மீட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுவந்தாா்.
அரை அடி உயரமுள்ள இந்த மண் கலயம், கருப்பு நிறத்தில் மிகவும் பழைமைவாய்ந்ததாகத் தோன்றுகிறது. இது குறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வட்டாட்சியா் தெரிவித்தாா். மேலும், இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தினால், கீழடியைப் போல் தொன்மையான பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என வரலாற்று ஆா்வலா்கள் கூறுகின்றனா்.