கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தியும், அவா்களது வலைகளை அறுத்துதெறிந்தும் விரட்டியடித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துள்ளாா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், மீனவா்கள் மீது பாட்டில், கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனா். மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை கடலில் அறுத்தெறிந்தனா். இதனால் படகு ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்புடன் ஞாயிற்றுக்கிழமை மீனவா்கள் கரை திரும்பினா்.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடா் அத்துமீறலை தடுக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.