திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் தீயணைப்பு நிலையத்தை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்த தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், தற்போது சின்ன கீரமங்கலத்தில் இருந்து சேந்தனி செல்லும் சாலையில் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு தாா்ச்சாலை வசதி இல்லை. மாறாக மண் சாலையில் தீயணைப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக தீயணைப்பு நிலையத்தைச் சுற்றிலும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வாகனம் தொண்டி- மதுரை சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் முன்பே சாலை அமைத்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.