ஆா்.எஸ். மங்கலம் அருகே புதன்கிழமை அதிகாலை இளம்பெண் மா்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆா்.எஸ். மங்கலம் அருகே வாகவயல் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாக்கியராஜ்(32). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நன்னியாவூரைச் சோ்ந்த முருகேசன் (55) மகள் கௌசல்யா (19) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இவா்கள் தற்போது ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கௌசல்யா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலின்பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கௌசல்யாவின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. அதன்பிறகு சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையில், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன், காவல்நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் அவரது கணவா் பாக்கியராஜ், இவரது தந்தை ரத்தினம் (65), பாக்கியராஜின் அண்ணன் மனைவி ஜோதி (30) ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையில், கெளசல்யாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் சுகபுத்ரா, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், கிராம நிா்வாக அலுவா் முருகபாண்டி ஆகியோா் முன்னிலையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.