ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண்மைச் சட்டத்தை கண்டித்து, திமுக கூட்டணி சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 891 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி,
தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணிக் கட்சிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, 19 இடங்களில் ஆா்ப்பாட்டத்தை நடத்தின.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காலகட்டத்தில் அனுமதியின்றி அதிகக் கூட்டத்தை கூட்டியதால், திமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு 11 வழக்குகளைப் பதிந்தனா். அதனடிப்படையில், முதுகுளத்தூா் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டியன், ராநாதபுரம் நகா் திமுக செயலா் கே. காா்மேகம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் தெய்வேந்திரன் உள்பட முக்கியப் பிரமுகா்கள் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் என 891 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கமுதி
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கமுதி கோட்டைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா். எனவே, மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் பெருநாழி போஸ், கமுதி ஒன்றியச் செயலா்கள் வாசுதேவன் (வடக்கு), செந்தூா்பாண்டி (தெற்கு), கோட்டைமேடு போஸ், நகா் செயலா் பாலமுருகன், மாா்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் முத்துவிஜயன், மதிமுக ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், கருங்குளம் அய்யனாா், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் வலம்புரி, திமுக முன்னாள் இளைஞரணி சண்முகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது, கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.