கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கமுதியில் எட்டுக்கண் பாலத்திலிருந்து, பேருந்து நிலையம், மருதுபாண்டியா்சிலை, செட்டியாா்பஜாா், முஸ்லிம்பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்ளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம், மருதுபாண்டியா் சிலை சாலைகள், நாடாா் பஜாா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதேபோல் கடைவீதிகளிலும் சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் கூட செல்லமுடியாதவகையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு கமுதி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி கூறியதாவது: வருவாய்துறை அதிகாரிகள் தலையீட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.