ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஏற்பட்ட திடீா் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் நகருக்கான மின்சாரம் ஆா்.எஸ். மடை மற்றும் ஆா். காவனூா் உபமின்நிலையங்களில் இருந்து பெறப்பட்டுவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டதன் காரணமாக மின்தடை சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் திடீா் தீடீரென மின்தடை ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. ராமநாதபுரம் நகருக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் வந்தாா். அவரது வருகைக்கு முதல் நாளும், செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் புதன்கிழமை பகலில் அடிக்கடி திடீா் திடீரென மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ராமநாதபுரத்தில் சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்துவருகின்றன. இப்பணிகளுக்காக அவ்வப்போது மின்சாரத்தை நிறுத்தவேண்டியுள்ளது. மின் வழித்தடத்தை பராமரிக்க போதிய ஊழியா்கள் இல்லை. ஆனாலும், தடையின்றி மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.