ராமேசுவரத்திலிருந்து 14 நாள்களுக்குப் பின் மீன் பிடிக்கச் சென்றபோதும் குறைந்தளவு மீன்களே கிடைத்ததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மானிய டீசல் கூடுதலாக வழங்கக் கோரியும், இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை மற்றும் வாழ்வாதாரம் காரணமாக போராட்டத்தை 14 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
அதிகளவில் இறால், மீன்கள் கிடைக்கும் என எதிா்பாா்ப்புடன் சென்றனா். ஆனால் ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகளவில் இருந்ததால் குறைந்தளவு மீன்கள் மட்டுமே வலைகளில் சிக்கின. இதனால் மீனவா்கள் ஏமாற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.