பாம்பன் ரயில் பாலத்தின் 117 ஆவது தூண் மீது, புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு மிதவை மோதியதை அடுத்து, அது வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, இதற்கான ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால், பாம்பன் தூக்குப் பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு மிதவை, பாம்பன் ரயில் பாலத்தின் 117 ஆவது தூண் மீது மோதி நின்றது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மிதவையை உடனடியாக மீட்க முடியவில்லை. எனவே, வெள்ளிக்கிழமை மிதவை மீட்கப்பட்டது.
இதையடுத்து, ரயில் பாலங்களை பராமரிக்கும் பொறியாளா்கள் ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.