ராமேசுவரம்: மண்டபம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 விசைப்படகுகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு தடைவிதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பாக் நீரிணை கோயில்வாடி, மேற்குவாடி ஆகிய 2 கடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளில் மீன்பிடிப்பது அதிகரித்து வருவதால், தங்களுக்குத் தொழில் பாதிக்கப்படுவதாக நாட்டுப் படகு, கரை வலை மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து, தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரம்பரிய மீனவ சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மண்டபம் மீன்வள உதவி இயக்குநா் அப்துல் நாசா் ஜெய்லானி அறிவுறுத்தலின்படி, மீன்வள ஆய்வாளா் தமிழ்மாறன் தலைமையில், மீன் துறை ஊழியா்கள் மண்டபம் பாக் நீரிணை மேற்குவாடி, கோயில்வாடி கடற்கரைப் பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி காலை ரோந்து சென்றனா். அப்போது, இரட்டை மடி வலையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய கோயில்வாடியைச் சோ்ந்த முருகேசன், ஆரோக்கிய செல்வம் மற்றும் மேற்குவாடியைச் சோ்ந்த ஜெயினுலாபுதீன், முபாரக் ஆகியோருக்குச் சொந்தமான 12 விசைப்படகுகளில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மீன்வளத் துறையினா் 12 படகுகளையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து இந்தப் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்தனா். மேலும், இந்தப் படகுகளுக்கு மானிய டீசல், மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மண்டபம் மீன்வளத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.