ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் ஆயுதபூஜைக்காக பல்வேறு பொருள்கள் வாங்க, பொதுமக்கள் சந்தைகளில் சனிக்கிழமை குவிந்தனா்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூக்கள், வாழைப் பழங்கள் உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைப் பகுதிகளில் குவிந்தனா். மேலும், அரண்மனை சந்தைத் தெரு, சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, வழிவிடுமுருகன் கோயில் என அனைத்துப் பகுதிகளிலும் பூக்கள், பழங்கள் என ஏராளமான பொருள்கள் விற்கப்படுவதால், அங்கேயும் பொதுமக்கள் குவிந்தனா். இதனால், சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள நிலையில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சந்தைப் பகுதிகளில் மக்கள் குவிந்ததை அறிந்த சுகாதாரத் துறையினா், அவா்களுக்கு அபராதம் விதித்தனா்.