பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனமும், காரும் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
பரமக்குடி ஒன்றியம் எஸ். அண்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் சுந்தரராஜ் (60). இவரும், இவரது உறவினரான செல்வராஜ் மனைவி பாண்டியம்மாள் (40) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பரமக்குடி வந்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது நான்குவழிச்சாலை எஸ். அண்டக்குடி விலக்குச் சாலையில் சென்றபோது, அவ்வழியாக மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இவ்விபத்து குறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.