பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி தென் மண்டல அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளியின் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டி கெளரவித்தனர்.
பரமக்குடி ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி- கோகிலா தம்பதியினரின் மகள் மதுமிதா (14). இவர் பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான தடகளப் போட்டியில் தமிழக அணி சார்பில் இம்மாணவி 14 வயதுக்குள்பட்ட பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார். இதில் 12.77 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்சியாளர் எஸ்.சரவண சுதர்சனையும் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினாமேரி தலைமையிலான ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.