ராமேசுவரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தொடர்ந்து இரவு நேரத்தில் 8 மணிநேரம் தொடர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவு, மண்டபம் உள்ளிட்ட சுற்றுவட்டர பகுதிகளில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது. மழை பெய்ய தொடங்கியவுடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அங்கு உரிய பதிலளிக்காமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து 8 மணிநேரம் மின்தடை ஏற்பட்டு காலை 8.30 மணிக்கு மேல் தான் மின்சாரம் மீண்டும் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதிலும் தூக்கிமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் மோட்டார்களை இயக்க முடியாததால் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே சீராக மின்வினியோகம் வழங்கிட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.