ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தில் நெகிழி ஒழிப்பு இயக்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியில் கூடுதல் ஆட்சியா் (ஊரக வளா்ச்சி முகமை) மா.பிரதீப் குமாா், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண்மைக்குழு உறுப்பினா் கே.முரளிதரன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) அய்யனாா் மற்றும் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், புகைப்படச் சங்கப் பிரதிநிதிகள், தனுஷ்கோடி பகுதியில் உள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழக முதல்வா் உத்தரவின்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமேசுவரத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக 1 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகா்கள் வருகின்றனா். அவா்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனா். அதனடிப்படையில், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரைப் பகுதியினை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் தொடா்ந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.