ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாநில இணை இயக்குநர் எஸ். நாகராஜமுருகன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. இந்தநிலையில், மாநில பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) எஸ். நாகராஜ முருகன் செவ்வாய்க்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யணன் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். ஆய்வு குறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை இடைநில்லாமல் படித்த மாணவ, மாணவியருக்கு ரூ.1500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் நடப்பு ஆண்டில் 9526 மாணவ, மாணவியர் ஊக்கத்தொகை பெறுகிறார்கள். அவர்களுடைய எமிஸ் எண்ணை பதிவேற்றம் செய்வது குறித்தும், அதனடிப்படையில் அவர்களது வங்கிக் கணக்கில் ஊக்கத் தொகை வரவு வைக்கப்படும் என்பதால், அதுதொடர்பாக இணை இயக்குநரால் ஆய்வு நடத்தப்பட்டது என்றனர்.
மேலும், நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியருக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அது தொடர்பாகவும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் இணை இயக்குநர் ஆலோசனை நடத்தியுள்ளார்.