ராமேசுவரத்திற்கு வரும் ரயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே துறை காவலர்கள் கூறியதாவது: ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் வந்து செல்வதற்காக தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் ரயில் பயணத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வரும் ரயில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் பொருட்டு ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை-ராமேசுவரம் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் சமூகவிரோத செயல்கள், குற்றங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாதாரண உடையில் ஏராளமான குற்றப்பிரிவு போலீஸார் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தனர்.