திருவாடானை அருகே தொண்டியில் வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து வெடிபொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
திருவாடானை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் தொண்டி - புதுக்குடி பகுதியில், ஆழ்கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட வெடி பொருள்களை ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக, தொண்டி கடலோர போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்ற கடலோரக் காவல் துறை சார்பு-ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் போலீஸார் ஆய்வு நடத்தினர்.
அதில், புதுக்குடியைச் சேர்ந்த சேதுராமன் மகன் வீரபத்திரன் (44) என்பவர், ஆழ்கடலில் வெடிவைத்து மீன்பிடிப்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் 65, டெட்டனேட்டர்கள் 44, வயர் 5 மீட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.