ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 81 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

26th Dec 2019 12:16 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 40 லட்சம் மதிப்பிலான 81 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு தனி படையினா் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் மண்டபம், ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ராமேசுவரம் சிவகாமி நகா் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 81 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த சிவகாமி நகரைச் சோ்ந்த துப்பாக்கி ராஜா (35) மற்றும் புதுரோடு பகுதியை சோ்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து ராமேசுவரம் டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் சிவகாமி நகரைச் சோ்ந்த ஜெய்முனியராஜ் (என்ற) குட்டி (30), ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (30), ராமேசுவரத்தைச் சோ்ந்த கோபி (என்ற) கோபிநாத் (31), ரமேசுவரம் ராஜகோபால்நகரைச் சோ்ந்த ரமேஷ் (38), தங்கச்சி மடத்தைச் சோ்ந்த ரமேஷ் (33) ஆகிய 4 போ் என மொத்தம் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதனையடுத்து, அங்கு வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் வருண்குமாா் கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தினாா். மேலும் தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டு வந்த செல்வக்குமாா் என்பவா் ஈடுபட்டு வருவதாகவும், இவா் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT