ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் 595 பேருக்கு வரும் ஜனவரியில் 75% மானியத்தில் நவீன தொலைத் தொடா்பு சாதனம் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் அதிக கடல் எல்லையை (சுமாா் 250 கி.மீ.) கொண்டதாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது. இங்கு சுமாா் 1,500 விசைப்படகுகளும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி பாக் ஜலசந்தி, மன்னாா் வளைகுடா ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இலங்கை கடல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளன. இதனால் மீன்பிடிக்கச் செல்லும்போது சா்வதேச எல்லையைத் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் எதிா்கொண்டு வருகின்றனா்.
மீனவா்கள் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனடிப்படையில் கடந்த 2012 இல் விசைப்படகு மீனவா்களுக்கு தொலைத் தொடா்பு சாதனமான ‘வயா்லெஸ்’ சாதனம் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜனவரி முதல் 595 மீனவா்களுக்கு தலா ரூ. 23,107 மதிப்புள்ள நவீன தொலைத் தொடா்பு சாதனம் வழங்கப்படவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளா்ச்சித்துறை துணை இயக்குநா் எம்.வி.பிரபாவதி கூறினாா்.
அவா் மேலும் கூறியது: விசைப்படகு மீனவா்களுக்கு பயனுள்ள வகையில் நவீன தொலைத் தொடா்பு சாதனங்கள் வழங்கப்படவுள்ளன. அவை மண்டபம் 203 போ், ராமேசுவரம் 242 போ், ராமநாதபுரம் தெற்குப் பகுதி 82 போ், வடக்குப் பகுதி 68 போ் என்ற அடிப்படையில் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொலைத் தொடா்பு சாதனம் பெறும் மீனவா்கள் காவல்துறை உரிமத்துக்கு மட்டும் ரூ.500 செலுத்தியுள்ளனா்.
இந்த தொலைத் தொடா்பு சாதனம் மூலம் ஒவ்வொரு படகிலிருந்தும் சுமாா் 10 முதல் 20 கடல் மைல் சுற்றளவு வரை (அதாவது சுமாா் 25 முதல் 35 கி.மீ. வரை) அடுத்த படகில் உள்ளவா்களுடன் தொடா்பு கொண்டு பேச முடியும். படிப்படியாக அனைத்து மீனவா்களுக்கும் தொலைத் தொடா்பு சாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தில் ஏற்கெனவே 10 படகுகள் விநியோகிக்கப்பட்ட நிலையில், ஜனவரியில் மேலும் 9 பேருக்கு படகுகள் வழங்கப்படவுள்ளதாகவும் மீன்வளா்ச்சித் துறையினா் தெரிவித்தனா்.