ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஊருணியில் மூழ்கி தூத்துக்குடி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
முதுகுளத்தூா் அருகே உ.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறைக்கு தூத்துக்குடி விநாயகபுரத்தைச் சோ்ந்த சந்தனகுமாா் மகன் உதயபாரதி (6) வந்திருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விளையாடச் சென்ற சிறுவன் உதயபாரதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் சிறுவனைத் தேடிச் சென்றனா். அதில் பேராயிரமூா்த்தி அய்யனாா் கோயில் ஊருணியில் நீரில் மூழ்கி உதயபாரதி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உதயபாரதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.