ராமநாதபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டப் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறையும், அறம் விழுதுகள் அமைப்பும் சேர்ந்து இப்பேரணியை நடத்தின. பழைய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து பேரணியை, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மீனா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
பேரணியில், தனியார் சமையல் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோஷமிட்டபடியும் வந்தனர். புதிய பேருந்து நிலையம், வழிவிடுமுருகன் கோயில், கேணிக்கரை சாலை, அரண்மனைத் தெரு வழியாக அரண்மனை முன்பு பேரணி நிறைவடைந்தது.
பேரணி தொடக்க நிகழ்ச்சியில் போதைத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முத்துக்கண்ணு முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மனநல மருத்துவர் பெரியார் லெனின் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதைத் தடுக்கும் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். வழக்குரைஞர் ஷேக்இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.