ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நிலா நகர் பகுதியில் மத்திய அரசின் விவசாய நியாய விலைக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கிஷான் ரேஷன் ஷாப் எனும் விவசாய நியாய விலைக் கடைகளை நாடு முழுவதும் நிறுவி வருகிறது. இக்கடைகள் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், மானிய விலையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, இடைத்தரகு எதுவும் இல்லாமல் விவசாயிகளும், பொதுமக்களும் நேரடியாக கொள்முதல் மற்றும் நேரடி விற்பனை செய்வதாகும்.
இதன்மூலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 28 விவசாய நியாய விலைக் கடைகள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பரமக்குடி நிலா நகர் பகுதியில் முதன்முதலில் விவசாய நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, விவசாய நியாய விலைக் கடை இயக்குநர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். சங்கர் முன்னிலை வகித்தார். பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் என். சதர்ன் பிரபாகர் விவசாய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.
இக்கடையில், வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருள்கள், சோப்பு போன்ற அன்றாட தேவைக்கான பொருள்கள் அனைத்தும் 10 முதல் 19 சதவீதம் மானிய விலையில் கிடைக்கும். இந்த மானியத்தை பெற, ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் அட்டை, விவசாய அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்சென்று, ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பின்னர், நாட்டில் எந்த பகுதியில் வேண்டுமானலும் பொருள்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.