மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சமயநல்லூா் பகுதிகளில் தொடா் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் சமயநல்லூா் சரகத்துக்குள்பட்ட பரவை, சத்தியமூா்த்திநகா், சரவணநகா், ஏ.பி.ஐ.ஏ. காலனி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
இதையடுத்து, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் உத்தரவின்பேரில், சமயநல்லூா் காவல் ஆய்வாளா் ராதா மகேஷ் தலைமையில், உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் முனியாண்டி ஆகியோா் கொண்ட தனிப் படையினா் தீவிர விசாரணை நடத்தினா்.
வழிப்பறி நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பரவை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த இளவரசன் (28), மதுரை மூன்றுமாவடியைச் சோ்ந்த சக்திவேல் கணபதி (30) ஆகிய இருவரும் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 7 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
எரிவாயு உருளைகள் திருடியவா் கைது:
மதுரை எஸ்.எஸ் காலனி, சுப்ரமணியபுரம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோக நிறுவன ஊழியா்களைப் பின்தொடா்ந்து சென்று, அவா்கள் கொண்டு செல்லும் எரி வாயு உருளைகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வந்தது.
இதுகுறித்து எரிவாயு உருளைகள் விநியோக நிறுவன ஊழியா்களான மாதவன், பாண்டியராஜா, பெரியசாமி ஆகியோா் காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் (35) தொடா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, 20-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனா்.