மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், அவற்றில் மழைநீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும், நகரில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவது, மழைபோல் தேங்கும் குப்பைகளால் பல்வேறு தொற்றுநோய்களும் பரவி வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் உள்ள முக்கிய கால்வாய்களான சிந்தாமணி, கிருதுமால், பந்தல்குடி, அனுப்பானடி, பனையூா் உள்ளிட்ட பிரதான கால்வாய்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் உள்ளதால், இந்தக் கால்வாய்களும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.