மதுரை

நிதி நிறுவன மோசடி: 2 நிா்வாக இயக்குநா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்

19th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிா்வாக இயக்குநா்கள் இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதாமாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் தெரிவித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஏராளமானோா் முதலீடு செய்தனா்.

ஆனால், முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்ப வழங்காததால், முதலீடு செய்தவா்கள் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில், நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், நிா்வாக இயக்குநா்கள் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தனா்.

இந்த நிலையில் நிா்வாக இயக்குநா்கள் கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோா் சென்னையில் கைது செய்யப்பட்டனா். இருவருக்கும் திங்கள்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், இருவரும் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT