மதுரை: மாற்றுத் திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி) பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மூலம் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (யு.டி.ஐ.டி) வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வர உள்ளது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவற்றை வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 420 ஊராட்சிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை கிழக்குப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவ. 21, 22, 23 -ஆம் தேதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதேபோல, மதுரை மேற்குப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நவ. 24, 25-ஆம் தேதிகளிலும், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நவ.27, 28, 29-ஆம் தேதிகளிலும், வாடிப்பட்டி பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நவ. 30 -ஆம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே, மதுரை மாவட்டத்தில் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்கள் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாம்களில் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை அசல், நகல், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-1 ஆகிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.