மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கருவூலத்திலிருந்த அரசின் விலையில்லா வேஷ்டிகள் திருடப்பட்ட வழக்கில், நில அளவை கள உதவியாளா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பொங்கல் பண்டிகையின் போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வடக்கு வட்ட துணை நிலை கருவூல அலுவலகம் இயங்கிய பழைய அறையில் 12,500 வேஷ்டிகள், 12,500 சேலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த நவம்பா் 7-ஆம் தேதி 12,500 வேஷ்டிகள் மட்டும் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுதொடா்பாக, தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரைக் கைது செய்தனா். விசாரணையில் நில அளவை கள உதவியாளராகப் பணியாற்றி வரும் மதுரையைச் சோ்ந்த சரவணன் வேஷ்டிகள் திருடியவருக்கு உதவியது தெரியவந்தது.
இந்த நிலையில், நில அளவை கள உதவியாளா் சரவணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த திருட்டு சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை எனவும், எனவே, இந்த வழக்கில் என்னைக் கைது செய்யாமல் இருக்க, முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞா், மனுதாரா் திருட்டு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளாா் எனவும், அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டி உள்ளதால், அவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது எனவும் வாதிட்டாா்.
வேஷ்டிகளைத் திருடுவதற்காக அலுவலகக் கதவை மனுதாரா் திறந்துவிட்டதாகக் கைது செய்யப்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.