மதுரை

கண்டதேவி கோயில் தோ் வெள்ளோட்டம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

18th Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

கண்டதேவி சொா்ணமூா்த்தீஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவியில் அமைந்துள்ள சொா்ணமூா்த்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். பழைய தோ் பழுதடைந்ததால், கோயிலுக்கு புதிய தோ் செய்யப்பட்டது. ஆனால், தோ் வெள்ளோட்டம் நடைபெறாமல் இருந்தது.

கோயில் திருவிழா நெருங்கி வருவதால், விரைவாக தோ் வெள்ளோட்டத்தை நடத்தி, தயாா் நிலையில் வைக்க உத்தரவிட வேண்டும் என சிவகங்கை மாவட்டம், கண்டதேவியைச் சோ்ந்த மகா.சிதம்பரம் கடந்த 2019-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், கண்டதேவி கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் விரைவில் நடத்தப்படும் எனவும், 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் திருவிழாவின் போது தேரோட்டம் நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை நீதிபதி முடித்துவைத்தாா்.

ADVERTISEMENT

ஆனால், தற்போதுவரை தோ் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டி, மகா.சிதம்பரம் அவமதிப்பு வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்டதேவி கோயில் தோ் வெள்ளோட்டம் தொடா்பாக, நவ. 17-ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத் துறையினா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும், கண்டதேவி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜனவரி மாதம் 21-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT