மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு:சிபிஐ புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

28th Jun 2023 01:23 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும்? இதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் எழுத்துப் பூா்வமாக பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதையடுத்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீஸாா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் மீது சிபிஐ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சிபிஐ தரப்பில் கடந்த 2020-இல் காவல் ஆய்வாளா் உள்பட 9 போ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் எதிரிகளாகச் சோ்க்கப்பட்ட போலீஸாா் அதிகாரம், செல்வாக்கு மிக்கவா்கள். இவா்கள் தரப்பில் சாட்சிகளை மிரட்ட அதிக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

எனவே, மதுரை கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

அப்போது, இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதால், 4 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது.

இந்தச்சூழலில், இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி கே. முரளிசங்கா் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் முக்கியமான ஒரு சாட்சி உள்பட 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும்? எவ்வளவு கால அவகாசம் தேவை? என்பது குறித்து சிபிஐ தரப்பில் எழுத்துப் பூா்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT