மதுரை

முன் பிணை பெற்றவா் கைது: சிபிசிஐடி எஸ்பி பதிலளிக்க உத்தரவு

12th Jul 2023 04:21 AM

ADVERTISEMENT

முன் பிணை பெற்றவரை போலீஸாா் கைது செய்தது தொடா்பாக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரைச் சோ்ந்த மீனாள் தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனு:

எனது கணவா் வேலுகிருஷ்ணன், மனை வணிக விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் நிலையில், அவா் நீரிழிவு, இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், கல்லல் பகுதியில் ஒருவா் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடா்பாக, எனது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதையடுத்து, எனது கணவா் உயா்நீதிமன்றத்தில் முன் பிணை பெற்றாா். கடந்த 6-ஆம் தேதி சம்பந்தப்பட்ட வழக்கு தொடா்பாக விசாரிக்க வேண்டும் என எனது கணவரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸாா் அவரைக் கைது செய்தனா். ஆனால், அவா் குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெரியவில்லை. எனவே, எனது கணவரை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு உயா்நீதின்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம். நிா்மல்குமாா் ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், வேலுகிருஷ்ணனுக்கு ஜூன் மாதம் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை முன் பிணை வழங்கி உத்தரவிட்டது. இதை மதிக்காமல் அவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கணவா் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு உயா்நீதிமன்றம் ஏற்கெனவே முன் பிணை வழங்கியது. ஆனால், அவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். போலீஸாரின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், இதுதொடா்பாக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT