மதுரையில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வருகை தரும் அமைச்சா் உதயநிதிக்கு, ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என்று அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறுகிறது. வண்டியூா் சுங்கச் சாவடி அருகே நடைபெறும் இந்த விழாவில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதையொட்டி, ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம், வண்டியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி.மூா்த்தி, மாநகா் மாவட்ட செயலாளா் கோ.தளபதி எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளா் மு. மணிமாறன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. வெங்கடேசன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளா்களிடம் அமைச்சா் பி. மூா்த்தி கூறியதாவது:
வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வரும், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சாா்பில் மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.