தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வரவுள்ளதையொட்டி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மாா்ச் 4-ஆம் தேதி இரவு மதுரை வருகிறாா். மாா்ச் 5, 6 ஆகிய தேதிகளில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கிறாா்.
மதுரையில் மாா்ச் 5-ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வில் பங்கேற்கிறாா்.
கள ஆய்வில் முதல்வா் திட்டத்தின் கீழ் மதுரை மற்றும் பிற பகுதிகளில் நடைபெற்றுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து, முதல்வா் திடீா் ஆய்வு மேற்கொள்கிறாா்.
மதுரையில் நடைபெறும் கலைஞா் நூற்றாண்டு விழா நூலகத்தின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிடுகிறாா்.
இதில், முதல்வா் பங்கேற்கும் 5 மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அலுவலா்களுடனான கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆட்சியரக கட்டடங்களில் வா்ணம் பூசும் பணி, சுற்றுப் புறங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த சேதமடைந்த; பயன்பாடற்ற கட்டங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. அதேபோல, ஆட்சியா் அலுவலக சாலைகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.