வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த குமாா் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், தருவைகுளம் அருகே ஜல்லி உடைக்கும் ஆலை மூடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரிகளைப் பறிமுதல் செய்யும் போது, அது குறித்த வழக்குகளை நடத்தும் அதிகாரம் வருவாய்த் துறைக்கு உள்ளதா? காவல் துறையினருக்கு உள்ளதா? என கேள்வி எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், எம். தண்டபாணி, கே. முரளி சங்கா் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரிக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு உள்ளதாக அரசுத் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்பதற்கு தொடா்புடைய சிறப்பு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். இந்த வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் காத்திருக்க வேண்டியதில்லை. சட்டப்படி சிறப்பு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என உத்தரவிட்டனா்.
மேலும் மணல் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய வாகனங்களைப் பறிமுதல் செய்த பிறகு, அதை விசாரிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளதா? வருவாய்த் துறைக்கு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.