ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 201 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் பணி வழங்கக் கோரி சிஐடியு சாா்பில் வருகிற மாா்ச் 2-ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, சிஐடியு தமிழகக் கூட்டுறவு சங்க பொதுச் செயலா் இரா. லெனின் வெளியிட்ட செய்தி:
கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் 7 மாவட்ட ஆவின் நிறுவனங்களில் மொத்தம் 201 பணியாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டனா். மேற்படி 201 பணியாளா்களும் 3 ஆண்டுகள் பணி முடித்த நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அவா்கள் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள்
நீதிமன்றத்தை அணுகி பணி நீக்கத்துக்கு எதிராகத் தடையாணை பெற்றனா். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆவின் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. எனவே, சிஐடியு தமிழகக் கூட்டுறவு சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் ஆவின் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை (மாா்ச். 2) மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றாா்.