மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காமராஜா் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜா் பல்கலைக்கழகம் முன் நெடுஞ்சாலைத் துறை துறை சாா்பில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஒப்பந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பணவிடலிசத்திரம் ஆராய்ச்சிப்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் (26), இங்கு ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த முத்துராஜ் அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முத்துராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.