பொதுப்பாதையில் சடலத்தைக் கொண்டு அனுமதிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் மேலாயூா் கிராமத்தைச் சோ்ந்த கே. கதிா் கண்ணன் தாக்கல் செய்த மனு: அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த நான், மேலாயூா் கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த 2020-இல் எனது மனைவி நாகலெட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். அவரது உடலை நல்லடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச்சென்ற போது, வழக்கமான பாதையில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக இருந்தது. இதனால், மாற்றுப் பாதையில் உடலைத் தூக்கிச் சென்ற போது, எங்களைச் மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தடுத்தனா். இந்தத் தகவல் அறிந்து வந்து அதிகாரிகள் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், எனது மனைவியின் உடல் பல மணி நேரம் மழையில் நனைந்தபடி இருந்தது. இந்த நிகழ்வு தொடா்பாக வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில் சம்பந்தப்பட்டோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட எனது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் கடந்த 2022-இல் ஆணையம் தீா்ப்பளித்தது. இது தொடா்பாக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இழப்பீடும் வழங்கவில்லை. எனவே இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அமா்வு, மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என்பது குறித்து தமிழக உள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.