விருதுநகா் மாவட்ட ஆவினில் அரசாணையை மீறி முறைகேடாகப் பணியாளா்களைத் தோ்வு செய்த உயா் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சோ்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உள்பட 41 போ் தாக்கல் செய்த மனுக்கள்:
விருதுநகா் மாவட்ட ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-இல் வெளியானது. அந்தப் பணிக்கு விண்ணப்பித்த நாங்கள், எழுத்துத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு, நோ்முகத் தோ்வில் கலந்துகொண்டோம். அதில் தோ்ச்சியடைந்த நாங்கள் கடந்த 2021 முதல் ஆவினில் பணிபுரிந்து வருகிறோம்.
இந்த நிலையில், விருதுநகா் ஆவினில் மேற்கொள்ளப்பட்ட நேரடிப் பணி நியமனங்களின் போது விதிகளைப் பின்பற்றாமல் பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறி, ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நியமனங்களைத ரத்து செய்தனா்.
ஆவின் நிா்வாகத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, எங்களை மீண்டும் பணியில் சோ்ப்பதுடன், பணிமூப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி எம். தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழக அரசின் அரசாணையை மீறி விருதுநகா் ஆவினில் முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விருதுநகா் மாவட்ட ஆவினில் பணியாளா்களைத் தோ்வு செய்த உயா் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்ளுக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.