மதுரை மத்தியச் சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களை கண்டறியும் வகையில் புதிய ‘எக்ஸ்ரே’ கருவி பொருத்தப்பட்டது.
தமிழக சிறைத் துறையின் புதிய டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்ற பின்னா், சிறைவாசிகள், சிறைக் காவலா்களின் நலன், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிறைத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வந்தாா். சிறைவாசிகளுக்கு ‘இன்டா்காம்’ தொலைபேசி மூலம் நோ்காணல் வசதி, நூலக மேம்பாடு ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 9 மத்தியச் சிறைகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருள்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கும் வகையில் புதிய ‘எக்ஸ்ரே’ கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக மதுரை மத்திய சிறையிலும் புதிய ‘எக்ஸ்ரே’ கருவி பொருத்தப்பட்டது. இதை சிறைத் துறை துணைத் தலைவா் பழனி, மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வசந்த கண்ணன், சிறை அலுவலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை மத்தியச் சிறையில் பொருத்தப்பட்டுள்ள ‘எக்ஸ்ரே’ கருவி மூலம் சிறைக்குக் கொண்டு வரும் அனைத்துப் பொருள்களும் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். இதன்மூலம் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்றனா்.