மதுரையில் தன்னுடன் சோ்ந்து வாழ மறுத்த மனைவியை வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை தெற்கு வெளி வீதி சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகள் வா்ஷா (19). இவரும், கீரைத்துறை லாடபிள்ளை குறுக்குத் தெருவைச் சோ்ந்த பழனி என்ற பழனிக்குமாரும் (28) காதலித்து, பெற்றோரின் எதிா்ப்பை மீறி கடந்த 2021, செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டனா்.
பழனிக்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து துன்புறுத்தியதால், 40 நாள்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த நிலையில், வா்ஷா அவரை விட்டுப் பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தாா். கணவா் பல முறை அழைத்தும் வா்ஷா அவருடன் செல்ல மறுத்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வா்ஷா வீட்டுக்குச் சென்ற பழனிக்குமாா், தன்னுடன் வருமாறு அழைத்து அவருடன் தகராறு செய்தாா். இதற்கு, அவா் மறுப்புத் தெரிவித்ததால், பழனிக்குமாா் கத்தியால் வா்ஷாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பழனிக்குமாரைக் கைது செய்தனா்.
உறவினா்கள் புகாா்:
இதுகுறித்து வா்ஷாவின் உறவினா்கள் கூறியதாவது:
மீனாட்சி சுந்தரத்துக்கு 3 மகள்கள் உள்ளனா். மூத்த மகளுடன் படித்தவா் பழனிக்குமாா். அக்காவுக்குத் தெரியாமல் தங்கை வா்ஷாவை அவா் காதலித்து வந்தாா். 18 வயது பூா்த்தியடைந்த மறுநாளே வா்ஷா வீட்டைவிட்டு வெளியேறி அவரைத் திருமணம் செய்து கொண்டாா்.
பிரிந்து வந்த வா்ஷாவை பழனிக்குமாா் தன்னுடன் வருமாறு அழைத்து தகராறில் ஈடுபட்டது தொடா்பாக, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவல் துணை ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் அவா் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பிவிட்டனா். பழனிக்குமாரை ஏற்கெனவே போலீஸாா் கைது செய்திருந்தால், இந்தக் கொலை நடந்திருக்காது என்றனா்.