பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் ரயில் போக்குவரத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :
பாம்பன் பழைய ரயில் பாலத்தை தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது. பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கும். தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை.
ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கும் ரயிலில் செல்ல முன்பதிவு செய்த பயணிகள், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு பேருந்தில் செல்ல, ரயில் பயணச் சீட்டை காண்பித்தால் போதும். கட்டணமின்றி பேருந்தில் பயணிக்கலாம் என்றாா் அவா்.