மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான வலைவீசி தெப்பக்குளத்தையும், கோயிலையும் கண்டுபிடித்துத் தரக் கோரி காவல் நிலையத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அண்ணாநகரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். உயா்நீதிமன்ற வழக்குரைஞரான இவா் தலைமையில் வழக்குரைஞா்கள் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தை அடுத்த ரயில்வே தண்டவாளம் அருகில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.81 ஏக்கா் பரப்பளவில் வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயில் என்ற கோயிலும் இருந்தது. கரோனா காலத்துக்கு முன்பு வரை ஒவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்டு வலைவீசித் தெப்பக்குளத்தில் எழுந்தருளி மீன் பிடி உற்சவத்தை முடித்து கோயிலுக்குச் செல்லும் திருவிளையாடல் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். கரோனா தொற்றால் 3 ஆண்டுகளாக வலைவீசி மீன்பிடி லீலை நடை பெறவில்லை. இந்த நிலையில் வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயில் ஆகியவை அப்பகுதியில் இல்லை. வலைவீசி தெப்பக்குளம் இல்லாததால் இந்த ஆண்டு மீன்பிடி லீலை கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.
எனவே மாயமான வலைவீசி தெப்பக்குளம், காளக்கோயிலை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இந்த புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.