தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் எல்கைப் பந்தயம் நடத்த மாவட்டக் காவல் துறை உரிய விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்க வேண்டும் என, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனவேந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், பொன்காடு கிராமத்தில் உள்ள அடைகாத்தான் அய்யனாா் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி, கிராம மக்கள் இணைந்து எல்கைப் பந்தயம் (குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் பங்கேற்கும் பந்தயம்) நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போட்டி, கடந்தாண்டு எங்கள் கிராமத்தில் நடைபெற்றது.
இதன்படி, இந்த ஆண்டும் எல்கைப் பந்தயம் நடத்துவது தொடா்பாக கடந்த 23- ஆம் தேதி தொடா்புடையத் துறை அலுவலா்களிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே எல்கைப் பந்தயம் நடத்த அனுமதி வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுக்குக் காவல் துறையினா் உரிய விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருகிற 5- ஆம் தேதி நடைபெற உள்ள மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயத்துக்கு உரிய விதிமுறைகளுடன் தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.