மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவா் பூங்கா அருகில் உள்ள மேல்நிலை தொட்டியிலிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகத்தை மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சியின் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், உள் மற்றும் வெளிநோயாளிகள், பணியாளா்கள் என அனைவருக்கும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் மதுரை மாநகராட்சி ராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீா் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ராஜாஜி பூங்கா அருகில் உள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டியிலிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை கூடுதல் கட்டடத்துக்கு ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 1,200 மீட்டா் நீளத்துக்கு 90 எம்.எம்.சி.ஐ.குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்வதற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் தண்ணீா் விநியோகத்தை தொடக்கி வைத்தனா். இதில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, நகரப்பொறியாளா் லெட்சுமணன், உதவி ஆணையா்கள் வரலெட்சுமி, சுரேஷ்குமாா், செயற்பொறியாளா் (குடிநீா்) பாக்கியலெட்சுமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.