மதுரை செல்லூா்-தத்தனேரி மேம்பாலத்துடன் இணைக்கும் இணைப்பு பால பணிகளை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
மதுரை செல்லூா் பகுதியில் ரயில்வே கடவு அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பாலம் ஸ்டேசன் சாலையில் இருந்து தொடங்கும் மேம்பாலம் எல்ஐசி அலுவலகம், தத்தனேரி மயானத்தை தாண்டிச் சென்று இறங்குகிறது. இதன்மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரப்பாளையம் செல்வதற்கு ஏதுவாக செல்லூா்-தத்தனேரி மேம்பாலத்துடன் இணைக்கும் இணைப்பு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து ரூ. 9.5கோடி மதிப்பீட்டில் புதிய இணைப்புப் பாலம் கட்டும் பணி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று மேம்பாலப்பணியைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.