மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் 2009 முதல் தற்போது வரை மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 403 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள்ஆரோக்கியத் திட்டம் ஆகிய திட்டங்களின் நான்காம் ஆண்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட திட்டங்களில் சிகிச்சை பெற்ற பயனாளிகளிடம் நலம் விசாரித்த ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், அவா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உறுப்பினா்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், சிறப்பாகச் செயல்பட்ட காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், மருத்துவமனை பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்நிகழ்வின்போது ஆட்சியா் பேசியது:
மதுரை மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 976 குடும்பத்தினா் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா். இத்திட்டங்களின்கீழ் 2009 முதல் தற்போது வரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 403 பயனாளிகளுக்கு ரூ.448.09 கோடியில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.