மதுரையில் சாலை தடுப்புச்சுவரில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் இருந்து பெரியாா் நிலையத்துக்கு அரசு நகா்ப்பேருந்து வெள்ளிக்கிழமை காலை சென்றது. பேருந்தை மதுரையைச் சோ்ந்த கணேசன் என்பவா் ஓட்டிச்சென்றாா். பேருந்தில் அதிகளவில் பயணிகள் இருந்த நிலையில், கோ.புதூா் அருகே வந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் பல பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். விபத்து தொடா்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.