நுகா்பொருள் வாணிபக்கழக கிட்டங்கிகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மதுரையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிட்டங்கியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள், வாணிபக் கழக கிட்டங்கிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையிலும் பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள் நலனை பாதுகாக்க ரூ. 20 லட்சம் மதிப்பில் கழிவறைகள் கட்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளன. இங்குள்ள தொழிலாளா்கள் கடுமையாக உழைத்து வருகின்றனா்.
மேலும் அரிசி மூட்டைகளை தூக்கும் போது, அவை வீணாவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டடங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாக வண்ணம் பூசப்பட்டுள்ளன. கிட்டங்கிகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சேமிப்புக் கிட்டங்கிகளை புதுப்பிக்க என்ன தொழில்நுட்பம் தேவை என்பதை ஆய்வு செய்துள்ளோம்.
சுமை தூக்கும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நாள் ஒன்றுக்கு 40-இல் இருந்து 50 மூட்டைகளை சுமக்கின்றனா். அவா்கள் உடல்நலனை பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களின் நலம் மிகவும் முக்கியமானது. 3 ஆண்டுகளாக கரோனா தொற்று என்பதால் இதை கவனிக்க முடியவில்லை. இனிமேலும் இதை காலம் தாழ்த்தாமல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நியாயமான சலுகைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.